கூத்தரங்கின் முதலாவது இதழ் வெளியீடு 06.03.2004 அன்று மாலை 7.00 மணிக்கு திருநெல்வேலியில் அமைந்துள்ள செயல் திறன் அரங்க இயக்கத்தின் அலுவலகத்தில் மிக எளிமையாக நடைபெற்றது. தே.தேவானந்த் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கூத்தரங்கின் ஆசிரியர்களும் செயல்திறன் அரங்க இயக்கத்தின் மாணவர்களும் பங்கு கொண்டனர்.
இந்த நிகழ்வில் கூத்தரங்கின் முதலாவது பிரதியை ஈழத்து நவீன் தமிழ் நாடக உலகின் தாய் என்று வர்ணிக்கப்படுகின்ற கலாநிதி குழந்தை ம.சண்முகலிங்கம், ஈழத்து மூத்த எழுத்தாளர் பேராசிரியர் நந்தி அவர்களுக்கு வழங்கி கூத்தரங்கினை உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்தார்.
இதில், நாடகமும் அரங்கியலும் துறைசார் சஞ்சிகைகள் பல ஏற்கனவே வந்திருப்பது பற்றி குழந்தை ம.சண்முகலிங்கம் குறிப்பிட்டார். அவற்றில் பல இடைநடுவில் நின்றுவிட்டன. தற்போது திருமறைக் கலாமன்றத்தின் ‘ஆற்றுகை’ தொடர்ந்து வெளி வருகிறது. இருப்பினும், தொடர்ந்து இயக்குவதில் சிக்கல்களை எதிர்நோக்குகிறார்கள். இந்தியாவில் இருந்து ‘கட்டியம்’ என்ற உலகத் தமிழ் அரங்க இதழ் வெளிவருகிறது. அவர்களுக்கும் ஆக்கங்கள் பெறுவதில் சிரமங்கள் உள்ளன.
‘அரங்கம்’, ‘கல்யாணி’, ‘நாடக வெளி’ (இந்தியா) போன்றன இடை நடுவில் நின்றுபோன நாடக சஞ்சிகைகள் என்பதையும் சுட்டிக் காட்டினார். இந்தப் பின்னணியில் மிக நம்பிக்கையுடன் செயல் திறன் அரங்க இயக்கத்தினர் கூத்தரங்கை ஒரு செய்தி இதழாகக் கொண்டு வருவது மகிழ்வுக்குரியது. தளராது தொடர்ந்து செயற்படவேண்டும் என்றும் குழந்தை ம.சண்முகலிங்கம் குறிப்பிட்டார்.
பேராசிரியர் நந்தி அவர்கள் தனது கருத்துரையில், கூத்தரங்கை, தொடர்ந்து வெளியிடுவது தொடர்பான தனது ஆலோசனைகளை முன்வைத்தார்.
ஆசரியர் குழு ஒன்று அமைந்திருப்பது பாரட்டுக்குரியது. இது தொடர்ந்து நடப்பதற்கான நல்லதொரு வழி, ஒரு சிலர் விடுபட்டுச் சென்றாலும் வேறு சிலரை உள்வாங்கித் தொடர்ந்து நடத்த முடியும். இருப்பினும் தொடர்ச்சியை பேணுவதற்கு ஒருவராவது தொடர்ந்து இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
ஈழத்து சஞ்சிகை மரபை எடுத்துக் கொண்டால் தனிமனிதர்களின் முயற்சியால் நடத்தப்படுகின்ற சஞ்சிகைகள்தான் தொடர்ந்து வெளிவருகின்றன. ‘மல்லிகை’ 35 வருடங்களுக்கு மேலாக நடப்பதற்கு காரணம் டொமினிக் ஜீவா என்ற தனி மனிதன்தான், என்பதை குறிப்பிட்டு தனி மனிதன் இல்லாத போது அந்தச் சஞ்சிகைகளின் நிலை கேள்விக் குரியதாகிப் போகும் என்பதையும் வலியுறுத்தி, இங்கு ஆசிரியர் குழு ஒன்று இருப்பதால் அவ்வாறான துயர் ஏற்படுவதற்கு வாய்ப்புக் குறைவு என்றும் கூறினார்.
கூத்தரங்கில் வருகின்ற கட்டுரைகளை ஆண்டு ஒன்றில் தொகுத்து தனி ஒரு புத்தகமாக வெளியிடலாம். அவை மிகப் பயனுள்ளதாக அமையும். செலவைச் சீர்செய்யவும் இலகுவாக இருக்குமென்று குறிப்;பிட்டார்.
கூத்தரங்கில் தமிழ்ப் பிரதேசங்கள் அனைத்திலும் நடக்கின்ற அரங்க முயற்சிகள் வெளிவரவேண்டும். ஒவ்வொரு பிரதேசங்களுக்கும் சென்று அங்கு நாடகங்கள் செய்பவர்களைச் சந்தித்து வருவது நல்லது என்று குறிப்பிட்டார். மேலும் கூத்தரங்கை நாடக ஆர்வலர்கள் அனைவரும் பெறுவதற்கு மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் பற்றி ஆராய்ந்ததுடன் வெளியீட்டு நிகழ்வு நிறைவு பெற்றது.