
கிராம மட்டத்தில், நிகழ்வுகளில் நாடகம் மேடையேற்றுவதற்காக தாவடி தெற்கில் ஓர் நாடகக் குழு தனது பணியை மேற்கொண்டு வருகிறது. “சிறி காளியம்பாள்” சனசமூக நிலையத்தில் “அம்பாள் நாடக மன்றம்” என்ற பெயரில் 60களில் இருந்து இயங்கி வரும் இந்நாடகக் குழு சனசமூக நிலைய நிகழ்வுகள், கோயிற் திருவிழாக்கள், பண்டிகைகளில் நாடகத்தை மேடையேற்றி வருகிறது.
இம்மன்றத்தின் நாடகச் செயற்பாடுகளிற்கு திரு. முருகர் அப்பையா (64), திரு. ஆறுமுகம் தெய்வேந்திரம் (56), திரு. முருகேசு இரத்தினசிங்கம் (50) என்பவர்கள் உறுதுணையாக இருப்பதோடு, ஆறுமுகம் தெய்வேந்திரம், தேசிங்கராஜா செல்வக்குமார் (23) ஆகியோர் நாடகங்களை எழுதி நெறியாள்கை செய்து வந்துள்ளார்கள். தமது நாடகங்களை “சமூக நாடகங்கள்” எனக் கூறும் இவர்கள், பெரும்பாலும் சமகால ஊர்ப் பிரச்சினைகளை நாடகக் கதையாக அமைத்துக் கொள்கிறார்கள். இவற்றுள் “வித்தியா சமானவள்”, “கதிரை யாருக்கு?” போன்ற நாடகங்களைக் குறிப்பிடத்தக்கவை எனத் தெரிவிக்கிறார்கள்.
அத்தோடு இவர்கள் வீதி நாடகங்கள் அளிக்கை செய்வதிலும் ஈடுபாடு கொண்டிருக்கிறார்கள். கலை பண்பாட்டுக்கழக ஆதரவுடன் பல்வேறு வீதி நாடகங்களை அளிக்கை செய்துள்ளார்கள். “மாவீரர் வாரம்”, “மண்ணுக்காக……”, “போர் மண்ணில் மீண்டும் போர்”, “தீச்சுவாலை”, “நச்சுக் காற்று” என்பன தமது வீதி நாடகங்கள் எனத் தெய்வேந்திரம் தெரிவித்துள்ளார். இந்த வீதி நாடகங்கள் பெரும்பாலும் விடுதலைப் போராட்டம் சம்பந்தமாகவும், யுத்த அவலங்கள் சம்பந்தமாகவும், தென்னிலங்கை அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பாகவும் பேசுவதாக அமைந்திருந்தன.
இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »