கூத்தரங்கத்திற்கு ஒரு செய்தி வேண்டும் என்று நண்பர்கள் என்னைக் கேட்ட பொழுது, சாணக்கிய நீதிவெண்பாவில் உள்ள பாடல் ஒன்று நினைவுக்கு வந்தது. அப்பாடல் பின்வருமாறு:
“ஆடையால் மற்றை அணியால் அலங்கரித்துப்
பீடடைய வந்த பெருமூடன் - நீடவையில்
எத்துணையும் பேசாது அடங்கி இருப்பரேல்
அத்துணையும் மேன்மை அவர்க்கு”
‘பேசாது அடங்கி இருக்க’ இவர்கள் விடுவதாயில்லை. பட்டம், பதவி என்கின்ற ஆடையும் அணியும் என்னைப் ‘பெருமூடன்’ என்று காட்டாமல் மறைக்க முயன்றும் தோற்றுவிட்டதை உணர்கின்றேன். சாதிப்பவர்கள், அடங்கி இருக்கப் போதிப்பவர்கள் ‘சன்னதம்’ ஆடும் நிலை இன்று எல்லாத் துறைகளிலும் ‘தொற்றி’ விட்டது. நாடகம் இதிலிருந்து எவ்வாறு தப்பிக்கொள்ள முடியும்.
பூசாரிகள் ‘பார்வைபார்த்து’ ‘குழைக்கடித்து’ ‘விபூதி’ போட்டு இச் சன்னதத்தை நிறுவத்துவதற்குப் பதிலாக, உடுக்கடித்து, உச்சாடனப்படுத்தி, உருவேற்றிச் சன்னதத்தை உச்சமாக ஆட்டுவிப்பதையும் அவதானிக்க முடிகின்றது. ‘உரு’வேறியவர்கள் ‘கோழிகொண்டா’, ‘ஆடு கொண்டா’ என்று கூச்சல் போட்டால் அப்‘பாவிகளால்’ என்ன செய்ய முடியும். எனக்கும் கூத்து, நாடகத்திற்கும் உள்ள ஒரே உறவு இவற்றை என்னளவில் இரசிப்பவன் என்பதுதான். எனது அறிவு, அனுபவம், உணர்வு, விளக்கம் இவையே எனது அளவு கோல்கள். இவற்றிலிருந்து விடுபடமுடியாது. விடுபட விருப்பமும் இல்லை.
‘ஆமை ஆயிரம் முட்டைகளை இட்டுவிட்டு அடங்கி இருக்க கோழி ஒரு முட்டையை இட்டு விட்டுக் கொக்கரித்துக் கொண்டிருக்கின்றது’ என்ற பழமொழியும் என் நினைவில் வருகின்றது.
‘வான்குருவியின் கூடு வல்லரக்குத் தொல்கரையான்
தேன்சிலம்பி யாவர்க்கும் செய்யரிதால் - யாம்பெரிது
வல்லேமே யென்று வலிமை சொல வேண்டாம் காண்
எல்லோர்க்கும் ஒவ்வொன்று எளிது’
இதுவே கூத்துரங்கத்தினூடு நான் சொல்லும் செய்தியாகும்.