Theva

கோப்பாய் ஆசிரியர் கலாசாலை நாடக விழா – 2004

In சொற்சித்திரம் on அக்டோபர்20, 2007 at 9:49 மு.பகல்

கோப்பாய் ஆசிரியர் கலாசாலை மத்தமிழ் மன்றத்தினால் ஜூன் மாதம் 8, 9ஆம் திகதிகளில் முத்தமிழ் விழா நடத்தப்பட்டது. இவ்விழாவில் இயல், இசை நாடகம் எனப் பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.

முதலாம் நாள் நிகழ்வான நாடக விழா கா.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற. இவ்விழாவின் பிரதம விருந்தினராக யாழ் வலயக் கல்விப் பணிப்பாளர் திரு ப.விக்னேஸ்வரன் கலந்துகொண்டார். இவர் தனது உரையில் நாடகங்கள் பற்றிக் குறிப்பிடும்போது “வாழ்வியல் மேம்பாட்டிற்கும் சமூக விழுமிய மேம்பாட்டிற்குமான கருத்துக்களை நாடகங்கள் எடுத்துக் கூறின. இதனால், மக்கள் நாடகங்களை எதிர்பார்த்துக் காத்திருந்த காலம் அன்று, இன்று சினிமா, தொலைக்காட்சித் தொடர் என்பவற்றினால் மக்களுக்கும் நாடகத்திற்கும் இடையில் பெரியதொரு இடைவெளி ஏற்பட்டுள்ளது.” எனக் குறிப்பிட்டார்.

நாடக விழாவில் நான்கு நாடகங்கள் மேடையேற்றப்பட்டன. இந்நாடகங்கள் சமூகத்தில் உள்ள முக்கியமான விடயங்களைத் தமது கதைக்கருவாகக் கொண்டு அமைந்திருந்தன. ஒவ்வொரு நாடகத்தினதும் கதைக் கரு மிகத் தெளிவான முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறந்த முறையில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. சிற்சில இடங்களில் வெளிப்படுத்தலில் இடர்கள் காணப்பட்டிருந்தது. நாடகத்தில் நல்ல கதைகளை, கருக்களைத் தெரிவு செய்த போதும் தீர்வு பற்றிய தெளிவின்மை இருந்ததையும் காணமுடிந்தது.

அங்கு மேடையேற்றப்பட்ட ‘அறுவடை’ என்ற நாடகம் சமூகத்தில் போரினால் ஏற்பட்ட அவலங்களைச் சுட்டிக்காட்டி, இந்த அவலங்களில் இருந்து மீளவேண்டுமாயின் அதற்கு ஒரே வழி சமாதானமே என்பதை எடுத்துக் கூறுகின்றது. ‘நினைவுகளின் நிஜங்கள்’ என்ற நாடகம் சமூகத்தில் நடைபெறுகின்ற கலாசாரச் சீரழிவுகளை எடுத்துக் காட்டுவதாக அமைந்தது. இளைஞர்கள், சிகரெட் போதைவஸ்து வெளிநாட்டு மோகம் முதியொரை மதியாமை நீலப்படம் பெண் இச்சை மனிதாபிமானம் இன்மை போன்ற பல்வேறு தீய பழக்கங்களிற்கு உட்படுகின்ற நிலை, இதன் மூலம் உதவி என்ற போர்வையில் உலக நாடுகளின் தலையீடு என்பவற்றினாலும் எமது சமூகத்தில் ஏற்படுகின்ற கலாசார சீரழிவுகளைப் படம் பிடித்துக் காட்டுகின்றது. (இச்சீரழிவிற்குக் காரணம் சற்று நெருடலாக உள்ளது) பல்வேறுபட்ட பிரச்சினைகளை எடுத்துக் கூறவிளையும்போது அவற்றிற்கான காரண காரியங்கள், தீர்வு என்பவற்றை மிகத் தெளிவாக வரையறுக்க முடியாமல் சிக்கல்படுகின்றனர்.

‘மானுடச் சிக்கல்’ சந்தோசமாக வாழந்த ஒரு குடும்பத்தில் உள்ள ஆண் இல்லாமல் போகும்போது ஏற்படும் நிலையைச் சித்தரித்தது. கணவனின் இறப்புக்குப் பின்னர் அக்குடும்பப் பெண்ணும்ஃஅந்த மனம் பாதிக்கப்பட்ட தாயும் அவரது மகளும் சமூகத்தினால் விமர்சிக்கப்படுவதனால் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி நாடகம் பேசியது. தாயும் மகளும் எதிர்நோக்கிய பிரச்சினைகள் பற்றி நாடகம் விமர்சித்ததே தவிர பிரச்சினைகளுக்கான காரண காரியங்கள் அலசி ஆராயப்படவில்லை.

‘தடைகளைத் தாண்’ நாடகம் கல்வி கற்க ஆசைப்படுகின்ற ஒரு மாணவன் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் யாவை என்பது பற்றி குறிப்பிடுகின்றது. மதுபோதைக்கு அடிமையான தந்தை மகளை வேலைக்குப்போ எனத் துரத்துகிறார். அழுக்கான உடை, குப்பி விளக்கு, பின்தள்ளப்பட்ட கிராமத்தைச் சேர்ந்த மாணவன் இவ்வாறான தடைகளை எல்லாம் தாண்டி எவ்வாறு கல்வி கற்கின்றான் என்பதே கதையின் கரு. இங்கு எந்தச் சூழல் இருப்பினும் எந்தத் தடைகள் இருப்பினும் கல்வி கற்பது அவசியம் எனக் குறிப்பிடுகின்றனர்.

நிகழ்வில் பல்வேறு விதமான நடிகர்கள், திறமையுள்ளவர்கள் வெளிப்பட்டார்கள். தங்களது திறமை ஆளுமையை வெளிப்படுத்துவதற்கு இந்த அரங்கை ஒரு களமாகக் கலாசாலை மாணவர்கள் பயன்படுத்தியுள்ளனர். ஏற்கனவே கலாசாலை நிர்வாகத்தால் ஒழுங்கு செய்து நடத்தப்பட்ட நாடகக் களப்பயிற்சிகளும் இந்த நாடகப் படைப்பாக்கத்திற்குப் பெரும் துணையாக இருந்ததாகப் பங்குபற்றிய பலரும் குறிப்பிட்டார்கள்.

விழாவின் இறுதி நாளன்று ‘மயாண காண்டம்’ இசை நாடகம் ஆசிரியர் காலாசாலை இசைப் பிரிவு மாணவர்களால் மேடையேற்றப்பட்டது. இது ஒரு தரமான ஆற்றுகையாக அமைந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும். வருடாந்தம் நடைபெறும் இவ்விழாக்களில் பங்குபற்றும் ஆசிரிய மாணவர்கள் மேலும் அதிக அக்கறையுடன் கூடிய நாட்கள் செலவிட்டு நாடகங்களைப் படைப்பார்களேயானால் சிறந்த பல நாடகங்கள் உருவாகும்.