தலைவர், பொருளியல்துறை
யாழ். பல்கலைக்கழகம்
அண்ட வெளியையும் அதில் உலாவரும் முழுநிலாவையும் மின்னும் நட்சத்திரங்களையும் நாம் நேரே பார்க்கும்போதுள்ள பரவசத்தை, பிரதி பண்ணித்தரும் புகைப்படங்களோ தொடர் சினிமாச் சித்திரங்களோ ஏற்படுத்துவதில்லை. அதேவிதமாக, மனிதம் எதிர்கொள்ளும் சவால்களையும் நெருக்கடிகளையும் துன்பங்களையும் நாம் நேரில் பார்க்கும்போதுள்ள உணர்வுகளை வேறு எந்த ஊடகத்தாலும் முழுமையாகத்தர முடிவதில்லை. மனிதர்களே கூடி, ஆடியாடிப் புலம்புவதை நேரே பார்ப்பதால் தூண்டப்படும் உணர்வுகள் எங்களை ஆட்டுவிக்கிறது. அப்போது, நாங்களும் சேர்ந்து ஆடுகிறோம் சிரிக்கிறோம் கும்மாளம் அடிக்கிறோம்.
களைத்து ஓய்ந்து அடங்கிப்போகும்போது நடந்தவையெல்லாம் பொய்யாகிவிடுமா? மீண்டும் நடப்பதற்கான ஆயத்தம்தான் அது ஆகிவிடுமா? என்ற திகிலில் நடந்ததைப் பதிவு செய்ய வேண்டியது இன்றைய சந்ததியின் கடமையல்லவா. நடந்ததை நடந்தது போலவும் இவ்வாறு நடக்க வேண்டும் என்பதாகவும் வடிவமைத்தல்தான் கலை வடிவங்களா? என்ற பிரச்சினை என்னுள்ளே என்றும் நிலைத்து நிற்கிறதே. இந்தப் பிரமை என்னுள்ளே என்றும் ஊசலாடுகிறது. கூத்தாடிகளும் ஆட்டுவிப்பவர்களும் எனக்கொரு விடைதாருங்கள்.

