பதிவுகள்

நாடக அரங்கக் கல்லூரி ரசிகர் அவை

நாடக அரங்கக் கல்லூரியினர் வீரசிங்கம் மண்டபத்தில் மாதாந்தம் நாடகங்களை மேடையேற்றி வந்தார்கள். இதில் 1982ம் ஆண்டு மேடையேற்றப்பட்ட நாடகங்களின் விபரமடங்கிய அழைப்பிதழும் ரசிகர் அவைக்கான உறுப்பினர் அட்டையும் பதிவிற்காகப் பிரசுரிக்கப்பட்டுள்ளன. ‘கோடை’, ‘பொறுத்ததுபோதும்’,  ‘அபசுரம்’, ‘குருஷேத்திரோபதேசம்’, ‘சங்காரம்’ போன்ற நாடகங்களிற்கான மேடையேற்றம் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. டிக்கற் விபரமாக பருவச்சீட்டு ரூபா பத்தும் தனியொரு நாடகத்திற்கு ரூபா ஐந்தும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவை தவிர ரசிகர் அவை உறுப்பினர் கடைப்பிடிக்க வேண்டிய நிபந்தனைகளும் உறுப்பினர் அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ளது முக்கியமான விடயமாகவுள்ளது.

அவை:- இவ்வுறுப்பினர் அட்டையைத் தவறாது கொண்டு வரவும்.

நிகழ்ச்சி தொடங்குதற்கு 10 நிமிடங்களிற்கு முன்னராவது தங்கள் ஆசனத்தை உறுதிசெய்யவும்.
தங்கள் முகவரியில் மாற்றம் ஏற்படின் அறியத்தரவும்.

இவ்விடயங்கள் எண்பதுகளின் ஆரம்பங்களில் இருந்த நாடகப் பண்பாட்டை எடுத்துக்காட்டும் விடயங்களாகத் தெரிகின்றன.

  

சிங்ககிரிக் காவலன்pathivu.jpg

இது நாடக அளிக்கைக்காக 1962ம் ஆண்டு வெளியிடப்பட்ட பிரசுரம்.

‘சிங்ககிரிக் காவலன்’ நாடகம் யாழ். நகர மண்டபத்தில் 1962ம் ஆண்டு மார்ச் 6, 10ம் திகதிகளில் தமிழ்ப் புத்தக வெளியீட்டுக் கழகத்தினால் அளிக்கை செய்யப்பட்டது.

இலங்கைக் கலைக்கழகத்தின் முதற் பரிசு பெற்ற இந்நாடகத்தை எழுதி, நெறியாள்கை செய்தவர் சொக்கன் என்ற திரு க.சொக்கலிங்கம். நாடகத்தில் பங்கேற்றோர் ஏ.ஆர்.எம் ஐகபர்-காசியப்பன், செல்வன் இ.பச்சைமுத்து-அல்லி, செல்வன் அ.கந்தசாமி-மகாநாமதேரர், செல்வன் அ.எட்வின் லெனி-வசபன், செல்வன் க.தனபாலசிங்கம்-முகலன், திரு செ.திருநாவுக்கரசு-தென்னவன், செல்வன் இ.பத்மநாபன்-சீலகாலன், செல்வி.பாக்கியவதி தம்பு-கயற்கண்ணி, செல்வி பத்மாவதி தம்பிப்பிள்ளை-கருணவதி, செல்வி கமலசரஸ்வதி-செந்தாமரை.

பிரசுரத்தை தந்துதவியவர்: பேராசிரியர் நந்தி

  

‘வாணீபுர வணிகன்’

pathivu_vanipura-vanican.jpgசிலோன் ரேடியோ ரைம்ஸ் - டிசம்பர் 1-14-1952 என்ற வெளியீட்டில் பிரசுரிக்கப்பட்டது. மகாகவி ஷேக்ஸ்பியரின் ‘மேர்ச்சன்ற் ஒவ் வெனிஸ்’ என்ற நாடகத்தை ‘வாணிபுர வணிகன்’ என்று பி. சம்பந்த முதலியார் தமிழ்ப்படுத்தினார். அதனை வானொலிக்காக எஸ். சண்முகநாதன் எழுதினார். வி.என்.பாலசுப்ரமணியம் தயாரித்த இவ்வானொலித் தொடரில் பாத்திரங்கள் ஏற்றோர் விபரம் வருமாறு.

சி.சிவஞானசுந்தரம், கே.சிவத்தம்பி, எஸ்.சரவணமுத்து, ரி.கேதீஸ்வரநாதன், வி.என்.பாலசுப்ரமணியம், என்.ஜயநாதன், ஏ.சதாநந்தன், வி.சுந்தரலிங்கம், வி.ஜி.ஏ.கருணைரத்தினம், கே.சொர்ணலிங்கம், எஸ்.சண்முகநாதன், எம்.எஸ்.ரத்தினம், ஞான தீபம் சிவபாதசுந்தரம், பிலோமினா சொலமன், தனலக்ஷ்மி சின்னத்துரை.

1952ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1, 8, 15, 22, இல் இரவு 8மணி - 8.30 வரை சிலோன் றேடியோவில் ஒலிபரப்பாகியது.

ஆவணம் தந்துதவியவர் - எழுத்தாளர் நந்தி (பேராசிரியர். சி சிவஞானசுந்தரம்)

சதியின் பரிசு

pathivu.jpgசிவாஜி நாடக மன்றத்தாரின் தயாரிப்பில் சதியின் பரிசு என்ற நாடகம் உயிலங்குளம் என்ற இடத்தில் 26-04-1959இல் இரவு மேடையேற்றப்பட்டதற்கான பதிவு இதுவாகும். இந்நாடகத்தின் கதை, வசனம், பாடல்கள் என்பவற்றை எழுதி நெறியாள்கை செய்தவர் நவாலியூர் நா.செல்லத்துரை. இசை வழங்கியவர் றேடியோ புகழ் கே.குழந்தைவேலு. பின்னணி வாத்தியம் யாழ் நகர் மித்திரன் சகோதரர்கள். ஸ்டேஜ் மனேஜராக கே.சூசைதாசனும் இவருக்கு உதவியாக எம்.பி.சுகுமாரனும் செயற்பட்டுள்ளனர்.

ஆவணம் தந்துதவியவர்: நவாலியூர் நா.செல்லத்துரை

மறுமொழி இடுக