ஈழத் தமிழரின் கலாசாரத் தலைநகரமாகத் திகழ்வது யாழ்ப்பாணம். பாட்டும் கூத்தும் யாழ்பாணத்தானோடு கூடப்பிறந்தது. எத்துணை துயர் வந்த போதும் தமது பாரம்பரியத்தையும் கலைகளையும் காப்பதில் அவர்கள் தீவிரமாகவே இருந்துள்ளார்கள்; இருக்கின்றார்கள். இத்தனை துயர் பட்டபோதும் கூட இன்றும் - இத்தனை சிக்கல்களுக்கு மத்தியிலும் - தமது கலைகளைப் பேணிக் காக்கும் மாண்பு அவர்களிடம் இருக்கின்றது.
அந்த வகையில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுடன் மக்களாக இருந்து அவர்களின் ஆறுதலுக்காகவும் வளர்ச்சிக்காகவும் செயற்பட்டுக்கொண்டிருக்கும் அரங்குசார் நிறுவனம் ‘செயல்திறன் அரங்க இயக்கம்’. திருநெல்வேலியில் ஆடியபாதம் வீதியில் இருந்து இயங்கி வருகின்றது இந்த நிறுவனம். நாடகம் மற்றும் அரங்கு சார் நடவடிக்கைகளே இதன் முழு நாதம். யாழ். பல்கலைக்கழக நாடகமும் அரங்கியலும் துறையின் சிறப்புப் பட்டதாரியான திரு. தே.தேவானந்த் அவர்களால் 2000 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டு எழுச்சியுடன் நடைபோட்டுக் கொண்டிருக்கும் இந்த நிறுவனம் நாடக அரங்குக்கான இதழாக ‘கூத்தரங்கம்’ என்ற இதழை வெளியிடுகின்றது. இரு மாதங்களுக்கு ஒருமுறை இதழாக இது வெளியாகின்றது. இதுவரை 19 இதழ்கள் வெளியாகியுள்ளன. விரும்புபவர்கள் மாத சந்தாவைச் செலுத்தி பெற்றுக்கொள்ள முடியும்.
கடந்த மூன்று ஆண்டுகளாக வெளிவரும் இந்த இதழை இணையத்தில் ஏற்றி உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மத்தியில் வலம் வரவிடவேண்டும் என்பது எமது நீண்ட நாள் அவா. எனினும் நிதி வளங்களும் தொழில்நுட்ப வசதிகளும் கிடைப்பத்தில் இருக்கும் சிரமம் காரணமாக இதுநாள் வரை அது நடைபெறாமலேயே போயிற்று. இப்போது இந்த இலவச வசதிகளைப் பயன்படுத்திக் கொண்டு உலகெங்கும் பரந்து கிடக்கும் தமிழர்களிடம் ஈழத்தின் நாடகக் கலையைக் கொண்டு சோர்க்கும் முகமாக இந்த வலைப் பதிவை ஆரம்பிக்கின்றோம். உங்கள் ஆதரவையும் கருத்துக்களையும் நல்குவீர்கள் என்ற எதிர்பார்ப்புடன் எங்கள் பயணம் தொடரும்
ஆசிரியர் குழு
உங்கள் ஆதரவுடன்…..
தொடர்புகளுக்கு : ‘அருளகம்’ ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி, யாழ்ப்பாணம், இலங்கை.
email: koothharangam@gmail.com
அரங்கின் உயிர்ப்பினைப் பேணுவோம்
தமிழர் தாயகமெங்கும் பரவிக்கிடந்த பல அரங்க வடிவங்கள் செத்து மடிந்து போயின. எஞ்சிக் கிடப்பவை குற்றுயிராக ஊசலாடுகின்றன.
அரங்கில் ஆடியவர்கள் அரங்கக் கலையொடு தொடர்பறுந்தவர்களாகத் தம் நாளாந்த ஜீவனோபாயத்திற்குத் திண்டாடுகிறார்கள். அரங்கில் ஆடி ஓய்ந்த பலர் எவரது அரவணைப்புமின்றி தனிமையில் அல்லாடுகிறார்கள். ஊர்களில் நாடகங்கள் போடுவதற்கு ஆட்கள் இல்லை, மேடைகள் இல்லை, வசதிகள் இல்லை.
அரங்கு தொழில்சார் நிலை நோக்கி வளர்ச்சியடையவில்லை. கற்கை நெறியாக அரங்கு வந்த பின்பும் அரங்கத் துறையில் திருப்திகரமான வளர்ச்சியை உணர முடியவில்லைல.
போர் அனர்த்தத்தினால் தடைப்பட்டுப்போன அல்லது சிதைந்து போன அரங்கத்துறையை நீண்ட இடையவெளியின் பின் வெள்ளமென வந்த சின்னத்திரை கருவறுக்கின்றது.
இந்த நிலைமைகளை வெல்வதற்கான பல்வேறு செயற்றிட்டங்களைச் செயல்திறன் அரங்க இயக்கம் நடைமுறைப்படத்தி வருகிறது.
‘வளமான அரங்கப் பண்பாட்டு உருவாக்கத்திற்காக உழைப்போம்’ என்ற மகுட வாக்கியத்திற்கு ஏற்ப இந்நிறுவனம் இயங்கி வருகின்றது.
பல்வேறு அரங்க வடிவங்களின் உயிர்ப்பினைப் பேணுவதனூடகவே வளமான அரங்கப் பண்பாட்டை உருவாக்க முடியும் என்று நம்புகின்றோம். அதற்கு அரங்கச் செயற்பாடுகள் தொடர்பான தகவல் பரிமாற்றம் மிக அவசியம். அதனூடாகவே ஆரோக்கியமான முன்மொழிவுகள் கிடைக்கும். இதற்காக நீண்ட நாட்கள் முயற்சித்து இந்தத் தகவல் பரிமாற்ற ஏட்டினை வெளிக்கொணர்கின்றோம். இதனைத் தொடர்ந்து செயல்முனைப்புடன் இயக்குவதற்கு ஒவ்வொரு அரங்கவியலாளர்களினதும் ஒத்துழைப்பு மிக அவசியம்.
சிறார்கள், பாடசாலைகள், சனசமூக நிலையங்கள், நாடக மன்றங்களில் மேற்கொள்ளப்படுகிற அரங்க முயற்சிகள் இந்த ஏட்டில் பிரசுரிக்கப்படும். அரங்கத்துறை சார்ந்த கட்டுரைகள், செய்திகள், நேர்காணல்கள், அரங்க நிறுவனங்கள் தொடர்பான தகவல்களை எமக்கு அனுப்பி வைக்கலாம்.
கருத்துக்களையும் தகவல்களையும் பரிமாறிக்கொள்வோம். ஆக்கபூர்வமான விவாதங்களை உருவாக்கிக்கொள்வோம். தொழில்சார் நிலைக்கு அரங்கை வளர்த்தெடுப்போம். அரங்கின் உயிர்ப்பினைப் பேணுவோம். அதற்காக உழைத்திடுவோம். வாரீர்!
- ஆசிரியர் குழு

5:43 மு.பகல் இல் மே 9, 2008
Vanakkam.Please let me know thw the mode payment to subscribe koothharangam magazine. Love ,auromoorhty.
1:05 பிற்பகல் இல் ஜூன் 15, 2008
kindly send your issue as befor my collections.