கருத்து

இன்னும் வேண்டும் எம்பணி…

நாடகத்துறை இன்று கல்விசார் புலமைக்குரியதாக வாய்க்கப் பெற்றுள்ளது.

மக்கள் தம் வாழ்வுமுறையுடன் இரண்டறப் பின்னிக் கிடந்த கலைகளுள் கூட்டுணர்வுடன் சமூகத்தில் இய்கு நிலையில் இருந்தது நாடகக் கலை. இதற்கென முனைப்புடன், முழுமூச்சுடன் செயலாற்றியோர் எண்ணுக் கணக்கற்றோர்கள் அரங்க வலலாற்றின் தடம் பதித்தலில் திரும்பிப் பார்க்கப்டாதவர்கள் ஆகியுள்ளார்கள் பலர்.

தமிழ் நாட்டின் நாடகத்துறை வீரியத்தின் தாக்கம் யாழ்ப்பாணத்தை முற்றுகையிட்டிருந்தது. இசை நாடகம், ஸ்பெசல் நாடகம் எனக் கொட்டகை அமைத்து கொடிகட்டிப் பறந்தோர் பலர். முதலிட்டோர் சிலர் முழுதையும் இழந்தவரானார்கள். பெயரும் புகழும் அந்தஸ்தின் அடித்தளங்களாயிருந்தன. இவை ஒரு புறம் நகர்ந்து நைந்து போக, போரும் புதிய கற்கை நெறி வரவும் நாடக வரலாற்றை ‘நவீனம்’ எனும் செயல்வடிவத்துள் நகர்த்தியது.

ஈழத்து நாடக மரபின் எதிர்வு கூறல்கள் என்ன வென்று புரியாதநிலை, தென்னிந்தியத் திரைப்படங்கள், தொலைக்காட்சி நாடகத் தொடர்கள், தலை நிமிர முடியாத கல்வி முறைமைகள், புதிய புதிய வாய்ப்புக்கள் என நாடகத்துறையில் ஈடுபடுதலை மட்டுப்படுத்தி வருகின்றன.

எனினும் எங்கோ முளைவிட்டுச் செயலாற்றி, மெல்ல நலிந்து, ஓய்ந்து போவோர் இன்னும் எம்மத்தியில்; உள்ளனர். அவர்கள் இனங்காணப்பட்டு, ஊக்கப்படுத்தப்பட்டு, உயிராற்றலுள்ள நாடகச் செயல் வடிவங்களாக வெளிக் கொண்ர வேண்டியது சம்பந்தப்பட்ட அனைவரதும் கடமையுமாகும்.

வரலாறு படிக்கப்பட வேண்டியது, பேசப்பட வேண்டியது, புதியனவற்றின் பிரயோகங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டியன. உலகெங்கும் கால் பதித்திருக்கும் தமிழினத்தின் அரங்கியற் பரிணாமம் அனைத்தும் அனுபவங்களின் திரட்சியாக பீறிட்டு வெளிவரல் வேண்டும்.

இன்றுவரை நாடகத் துறைக்காக தம் உடல் பொருள் ஆவியை ஆகுதியாக்கியுள்ளோரை நினைக்கையில் மெய்சிலிர்கிறது. அந்தப் பாரம்பரியம் இன்னும் அழிந்துவிடவில்லை. எங்கோ ஒரு மூலையிலேனும் நாடக மேடையின் முனகல் கேட்டுக் கொண்டிருக்கத்தான்  செய்கிறது. அதற்கு உயிர் கொடுப்போர் கவனிக்கப்பட வேண்டியவர்கள். கரங்கொடுத்துக் கரையைத் தொட முயல்வது எம்முன்னுள்ள முக்கிய பணிகளில் ஒன்றாகவுள்ளது.

சிறப்புக் கலைமாணிப் பட்டதாரிகள் வரிசையில்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலிருந்து ஆண்டு தோறும் நாடகமும் அரங்கியலும் சிறப்புக் கலைமானிப் பட்டதாரிகள் வெளியேறி வருகிறார்கள். இதில் கடந்த ஆண்டு கற்கை நெறியைப் பூர்த்தி செய்துள்ள மாணவர்களிற்கு எதிர்வரும் மார்ச் 27ம் திகதி பட்டமளிப்பு விழா நடைபெறவுள்ளது.

பொன்னம்பலம் சிவபாலன், இந்திராணி இரசரட்ணம், சியாமா சிவபாதசுந்தரம், கமலினி சுப்பிரமணியம், சு.வரதகுமார்
ஆகியோர் நாடகமும் அரங்கியலும் கற்கையில் சிறப்புக் கலைமானி பட்டத்தைப் பெறவுள்ளார்கள் மிகக் குறைவான எண்ணிக்கையான மாணவர்களே விருப்பத்துடன் இக்கற்கை நெறியை சிறப்புக்கலையாக தெரிவு செய்கிறார்கள். அதற்காக விசேட அனுமதியின்படியும் இவ்வாறான கற்கைநெறிகளுக்காக மேலதிக மாணவர்களை பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு தெரிவு செய்கிறது. எனினும் அவர்களிற் பலர் சிறப்புக் கலைக்குரியதாக தமது கற்கையைப் பூர்த்தி செய்ய விரும்புவது அரிதாகவே காணப்படுகிறது.

அதற்கு பற்பல காரணங்கள் மாணவர் மனதில் இருக்கலாம். இவற்றையெல்லாம் தாண்டியும் இதுவரை ஐம்பதிற்கும் மேற்பட்டோர் யாழ் பல்கலைக்கழகம் ஊடாக நாடகமும் அரங்கியலும் சிறப்புக்கலைமானிப் பட்டத்தைப் பெற்றுள்ளார்கள். ஆயினும் இப்பட்டதாரிகள் மூலம் பாடசாலைகளில் காணப்படும் நாடகமும் அரங்கியலும் பாடநெறிக்கான ஆசிரியர்கள் வெற்றிடங்கள் நிரப்பப்படவில்லையென்பது குறிப்பிடவேண்டிய விடயமாகும். இந்நிலையில் தற்போது பட்டங்களைப் பெற்று வெளியேறும் இவ் ஐந்து பட்டதாரிகளும், வேலையற்ற பட்டதாரிகள் பட்டியலில் சங்கமித்து, தமது எதிர்கால ஏக்கத்துடன் இருப்பதுதான் நியதியா!

மறுமொழி இடுக